11/25/2010

ஊழல் பற்றிய மேக்ரோ பார்வை தேவை, மனச்சோர்வுகளைத் தவிர்க்க

நான் ரொம்ப நாளா தொட நினைத்த விஷயத்தை இப்போ எழுவதற்கான உந்துதல் ஜெயமோகன் எழுதிய “அலைவரிசை ஊழல்” பதிவுதான் தந்தது. முதலில் அதிலிருந்து எனது பதிவின் விஷயத்துக்கு சம்பந்தமுடையது என நான் கருதும் வரிகளை கோட் செய்து விடுகிறேன்.

ஓர் அரசாங்கம் என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட அரசியல்கட்டமைப்புக்குள் செயல்படும் பல்வேறு அதிகாரச் சக்திகள் நடுவே இயல்பாக உருவாகி வரக்கூடிய ஒரு சமரசப்புள்ளி அது . தராசின் முள் போல. அந்த அதிகார சக்திகள் நடுவே தொடர்ச்சியான ஒரு சமரசத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அந்த சமரசம் வழியாகத்தான் அது நிலையான அரசமைப்புகளை உருவாக்கி நீடிக்கச்செய்கிறது.

ஆகவே ஓர் அரசு என்பது இடைவிடாத அதிகாரப்போட்டிகளாலும், பேரம் பேசல்களாலும், பேச்சு வார்த்தைகளாலும், சமரசங்களாலும் ஆனதாகவே இருக்க முடியும். அதிகாரத்தரகர்கள், அதிகாரத்தூதர்கள், அதிகாரப்பிரதிநிதிகள் எப்போதும் அந்த மையத்தில் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள ஏற்றதாழ்வு வன்முறை பலத்தாலும் பணபலத்தாலும் ஆனது. ஜனநாயகத்தில் எண்ணிக்கை பலத்தாலும்.

அந்த அதிகாரச்சமநிலை குலையும்போது, சமரசம் மூலம் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லாமல் ஆகும்போது, அதிக அதிகாரம் கொண்ட தரப்புகள் குறைவான அதிகாரம் கொண்ட தரப்புகளை வன்முறை மூலம் அடக்குகின்றன. முன்பெல்லாம் நேரடி ஆயுத வன்முறை. இப்போது பொருளியல் வன்முறை. சமரசத்துக்கான நிபந்தனையாக வன்முறை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

ஓர் அரசாங்கம் என்பது கொள்கையளவில் எப்போதும் வன்முறையை தவிர்க்க முயலக்கூடியதுதான். அதற்காகவே சமரசத்தை அது செய்கிறது. அரசு இல்லையேல் வன்முறை மட்டுமே இருக்கும். அதையே அராஜகம் என்கிறோம். ஆனால் அரசின் பின்னணியில் எப்போதும் வன்முறை இருந்துகொண்டிருக்கிறது.

இதுவே அரசு செயல்படும் முறை. இப்போது மட்டும் அல்ல. அசோகச் சக்ரவர்த்தி காலம் முதல், அக்பர் காலம் முதல், ராஜராஜ சோழன் காலம் முதல் எப்போதும் இப்படித்தான். அரசாங்கத்தின் இயல்பும் செயல்பாடும் முழுக்கமுழுக்க அந்த அதிகாரச்சமநிலையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. அதில் இலட்சியவாதங்களுக்கு பெரிய இடம் ஏதும் இல்லை. தனிநபர் ஆளுமைகள் பெரிய விளைவுகளை உருவாக்குவதும் இல்லை.


============================================================================================

லஞ்சம் மற்றும் ஊழல் என்று நாம் இன்று சொல்லும் நிதிப்பங்கீடுகள் மூலமே முழுக்க முழுக்க அதிகாரச் சமநிலை பேணப்பட்டிருக்கிறது என்பதுதான். அவை நிதிமுறைகேடுகள் என்ற கோணமே இப்போது உருவானதுதான். மையத்துக்கு கொண்டுசேர்க்கபப்ட்ட நிதி பல்வேறு அதிகாரசக்திகளாலும் அவர்களைச் சேர்ந்தவர்களாலும் பங்குவைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.

இதில் நிதிவசூலித்தவர்கள் அவர்களால் முடிந்தவரை எடுத்துக்கொள்வது, தலைமை தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குவது எல்லாமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இடைத்தரகர்கள் , ரகசியபேரங்கள் எல்லாமே இருந்திருக்கின்றன. இன்றுபோலவே அன்றும் ஆயுதக்கொள்முதலில்தான் அதிகபட்சமாக ‘கமிஷன்’ அடிக்கப்பட்டிருக்கிறது. திருவிதாங்கூர் அரசில் ஒல்லாந்துக்காரர்களிடம் துப்பாக்கி வாங்குவதென்பது ஒரு பெரிய அரசியல் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது.

அன்று அவை எவருக்கும் பிழையெனவே தோன்றியிருக்காது. அவை பிழை என தோன்ற ஆரம்பித்தது பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசிக்காலத்தில் ஜனநாயகம் உருவாக ஆரம்பித்தபோதுதான். இந்தியாவில் வெளிவந்த ஆங்கிலசெய்தியிதழ்கள் ஆரம்பத்தில் வெளியிட்ட செய்திகள் பெரும்பாலும் ஊழல்கள் மற்றும் உயர்மட்ட பேரங்களைப்பற்றியவையே. அவை பிரிட்டிஷ் இந்திய அரசில் நிதிப்பங்கீடுகளில் அதிருப்தி அடைந்த அதிகாரத் தரப்புகள்தான் அவற்றை செய்தியாக்கியிருக்கின்றன.


==============================================================================================

திருவிதாங்கூரில் 1910 முதல் ’தேசாபிமானி’ என்ற செய்தியிதழ்மூலம் ராமகிருஷ்ணபிள்ளை என்பவர் மன்னரின் ‘ஊழல்களை’ செய்தியாக்கி கண்டித்தபோது மன்னருக்கும் அவரது சுற்றத்துக்கும் உண்மையிலேயே அவர்கள் செய்யும் பிழை என்ன என்று புரியவில்லை. மக்களுக்கும்தான். அரசாங்கப்பணத்தை மன்னர் பிடித்தமானவர்களுக்கு கொடுப்பது என்றும் உள்ள நடைமுறைதானே?

மெல்ல மெல்ல ஜனநாயகம் உருவாகி வந்தபோதுதான் மன்னர் கையாள்வது மக்களின் வரிப்பணம் என்றும், அது மக்களுக்கு நலப்பணிகள் ஆற்றுவதற்குரியது என்றும், அதை பிறர் அனுபவிப்பது பிழை என்றும் எண்ணம் உருவாகியது. அதன்பின்னரே அந்த ’பொருளாதார நடவடிக்கை’களுக்கு ரகசியத்தன்மை தேவைப்பட்டது. அதன்பின்னரே ஊழல் என்ற சொல்லாட்சி உருவானது.

ஆம் ’மக்கள் பணம்’ என்ற எண்ணம்தான் ஊழல் என்ற கருத்தை உருவாக்குகிறது. நாம் ஊழல் என்று நினைப்பதை கோடானுகோடி மக்கள் அப்படி நினைப்பதில்லை என்று கவனித்திருக்கிறேன். காரணம் அவர்கள் இன்னமும் ஜனநாயக அமைப்புக்குள் மன அளவில் வந்து சேரவில்லை. அவர்களுக்கு அது சர்க்கார் பணம்தான். அதை சர்க்காருடன் சம்பந்தப்பட்ட சக்திகள் பங்கிடுவதை அவர்கள் தவறாக எண்ணுவதில்லை. ஆகவேதான் ஊழல்வாதிகளை அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்.


===============================================================================================

இந்திய சுதந்திரப்போராட்ட காலகட்டத்திலும் சுதந்திரத்துக்குப் பின் சிறிதுகாலமும் இங்கே ஒரு இலட்சியவாதம் ஓங்கி நின்றிருந்தது. அப்போது ஊழல் எனப்படும் நிதிப்பங்கீடுகள் சம்பந்தமான சில மனத்தடைகள் தலைவர்கள் மட்டத்தில் இருந்தது. நேரு, படேல், ராஜாஜி, காமராஜ் போன்ற தலைவர்கள் தங்கள் அளவில் அந்த நிதியில் பங்குபெறாதவர்களாக இருந்தார்கள் என்றுவேண்டுமானால் சொல்லலாம்.
==============================================================================================

ஆனால் தேசம் என்ற அமைப்பின் பல்வேறு அதிகார சக்திகள் நடுவே சமரசம் செய்துகொண்டுதான் ஆட்சியை நிகழ்த்த முடியும். சுதந்திரம் கிடைத்த கொஞ்சநாட்களிலேயே இந்த யதார்த்தம் தலைவர்களுக்கு தெரிந்தது. எம்.ஓ.மத்தாய் போன்றவர்களின் சுயசரிதையில் இந்த யதார்த்தம் நோக்கி நேருவும் பட்டேலும் வந்து சேர்ந்த சித்திரம் உள்ளது. மும்பை தொழிலதிபர்களும் பெருநிலக்கிழார்களும் கடல்வணிகர்களும் அரசை பலதிசைகளுக்கு இழுக்கும் சித்திரத்தை நாம் அவற்றில் காண்கிறோம்.

==============================================================================================

என் இருபத்தாறு வயதில் ஒருநாள் மட்டும் டெல்லியின் இந்தியா இண்டர்நேஷனல் அமைப்பின் புல்வெளியில் அமர்ந்து உரையாடல்களைக் கேட்டபோது நான் அப்பட்டமாக உணர்ந்து அதிர்ந்த உண்மை இது. ஆகவே வெளிவந்த ஒரு ஊழலை வைத்து அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைவதற்கு ஏதுமில்லை.

ஜனநாயகத்தில் அரசின் அதிகாரம் மக்களின் அதிகாரம் என ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே அரசின் பணம் மக்களின் பணம். ஆகவே அரசு செய்யும் செலவுகள் மக்களுக்காக மட்டுமே இருக்கவேண்டும். இது அரசு முன்வைக்கும் அதிகாரபூர்வ நிலைபாடு. அத்தனை அரசியல் கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதை நடுத்தரவர்க்க மனிதர்களாகிய நாம் பள்ளிக்கூடத்தில் படித்து அப்படியே நம்புகிறோம்.

ஆகவே இந்தப்பங்குவைத்தல் ஒரு குற்றமாக நமக்குப் படுகிறது. அதை திருட்டு என்று எண்ணுகிறோம். அதைக்கொண்டு மக்கள் நலப்பணிகளை செய்திருக்கலமே என்று நினைக்கிறோம். இந்த ஊழல்களுக்கு அப்பாற்பட்ட தலைவர்களுக்காக ஏங்குகிறோம். இந்த அமைப்பில் எந்த தலைவர் வந்தாலும் செய்யக்கூடுவது ஒன்றையே என அரச நிர்வாகத்தை அறிந்த எவரும் சொல்லிவிட முடியும். காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் இதில் ஒன்றே. மன்மோகனும் அத்வானியும் புத்ததேவ் பட்டாச்சாரியாவும் ஒன்றே.

இந்தச்சித்திரத்தை முதலாளித்துவ அரசைப்பற்றியது மட்டும் என்று சிலர் சொல்லக்கூடும். நான் மேலே சொன்னபடி அரசாங்கத்தை சமரசப்புள்ளியாக காணும் கோணம் அந்தோனியோ கிராம்ஷியால் முன்வைக்கப்பட்டது. ஆனால் உலகம் முழுக்க இன்றுவரை உருவான எல்லா ‘புரட்சிகர’ அரசுகளும் இப்படித்தான் செயல்பட்டிருக்கின்றன. விதிவிலக்கே இல்லை.

சோவியத் ருஷ்ய அரசு என்பது முழுக்கமுழுக்க உயர்மட்ட ஊழலின் விசையால் முன்னகர்ந்த ஒன்று. இன்றைய சீன அரசு என்பது ஊழலையே அடிப்படை விதியாக கொண்டு செயல்படுவது. மக்கள் என்று ஒரு தரப்பே இல்லாதபோது அரசு செய்வது எல்லாமே சரிதானே? இந்திய ஊழல் எனபது சீன ஊழல்களுடன் ஒப்பிட்டால் சிறு துளிதான். ஒரு சர்வாதிகார அரசில் ராணுவத்தின் பங்கு பலமடங்கு அதிகரிக்கிறதென்பதே வேறுபாடு.


===============================================================================================

அப்படியானால் ஊழல் ஒரு விஷயமே இல்லையா? அதைப்பற்றி பேசவே கூடாதா? அப்படி இல்லை. ஊழலைப்பற்றிய எல்லா வெளிப்படுத்தல்களும் விவாதங்களும் அதற்கு எதிரான கோபங்களும் ஜனநாயகத்தில் மிகமிக முக்கியமானவையே.

ஏனென்றால் இங்கே மக்கள் என்று ஒரு தரப்பு உள்ளது. அதை குடிமைச் சமூகம் எனலாம். அதுவும் ஒரு முக்கியமான அதிகாரத்தரப்பே. எந்த அளவுக்கு அது தன்னுணர்வுகொண்டு, எந்த அளவுக்கு ஒன்றுபட்டு போராடுகிறதோ அந்த அளவுக்கு அது வலிமையானதாக ஆகிறது. தனக்கான பங்கை அது அது அவ்வாறுதான் பெற்றுக்கொள்ளமுடியும். அவ்வாறு அது தன் உரிமையை உணர்வதற்கும், போராட்ட உனர்வு கொள்வதற்கும் இந்த வெளிப்படுத்தல்களும் விவாதங்களும் உதவியானவை.

==============================================================================================

ஆக, ஊழல் என்பது அரசுகளில் - அவை எவ்வகையான அரசுகள் என்றாலும் - built-in என்று ஜெயமோகன் கூற வருகிறார் என நினைக்கிறேன். அதற்காக அவர் வைக்கும் வாதங்கள், காடும் மேற்கோள்கள் வலிமையானவை. அலட்சியம் செய்ய இயலாது.

ஆகவேதான் குஜராத்தில் மோதி அரசு நற்பணிகள் பல சக அரசியல்வாதிகளுக்கு சவாலாகவே உள்ளன. மோதியின் சக பிஜேபியினரும் இவர்களில் அடங்குவர். ஆகவே அவரை எப்படியாவது தங்கள் லெவலுக்கு இழுக்கவே முயலுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டு கூற முடியவில்லையா? இருக்கவே இருக்கின்றன 2002-ல் நடந்த கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு, அதன் விளைவான கலவரங்கள். அவற்றை பிரசாரம் செய்தும் அவை எடுபடாது போய் அவர் இரு சட்டசபை தேர்தல்கள், ஊராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி பெறுவதைப் பார்த்து ஆங்கில ஊடகங்களும் சரி, சீக்கியக் கொலை புகழ் காங்கிரஸ் கட்சியினரும் சரி வயிறெரிகின்றனர். நமது தமிழ் பதிவர்களும் விதிவிலக்கல்ல என்பதை இப்பதிவுக்கு வந்து சாமியாடப் போகும் பின்னூட்டங்கள் நிரூபிக்கும் என அஞ்சுகிறேன்.

இந்த நிலைமை எத்தனை காலம் நீடிக்கும் எனத் தெரியவில்லை. மோதியின் அரசால் தடுக்கப்படும் ஊழல்களால் பணம் சரியான முறையில் பல திட்டங்கள் மூலம் பொது மக்களையே சேருகிறது. அதுவே போதாதா சக அரசியல்வாதிகள் வயிற்றெரிச்சல்பட? அதுவும் மோதி மட்டுமே கண்ணில் தென்படுவதால், அவருக்குப் பிறகு குஜராத்தில் யார் என்ற மயக்கமும் ஏற்படுகிறது.

1977-ல் பதவிக்கு வந்த எம்ஜிஆரும் மோதி மாதிரியே ஊழலற்ற ஆட்சியையே தர முயன்றார். ஆனால் அவர் அரசை கருணாநிதியும் இந்திரா காந்தியுமாக சேர்ந்து அவர் ஆட்சியை கலைக்க மீண்டும் 1980 எலெக்‌ஷனில் அமோகமாக ஜெயித்த அவர் பிறகு ஊழலில் கருணாநிதியே அஞ்சும் அளவுக்கு ஈடுபட்டு, அவரை அரசியல் ரீதியாக பயங்கரமாகப் பழிவாங்கி செயல்பட்டார். எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சியில் அமரும் கனவு கூடக் காணமுடியவில்லை என்பதெல்லாம் ஓக்கே. ஆனால் ஊழலற்ற முதல்வரை ஊழல் சக்கரவர்த்தியாக மாற்றிய கருணாநிதி இன்னும் கொழிப்பதுதான் வருத்தம் அளிக்கிறது.

ஒரு வேளை ஜெயமோகன் சொல்லும் மக்களுக்கான பங்கீடு என்பது இலவச டிவி, கேஸ் கனெக்‌ஷன் என நினைத்து மக்கள் திருப்தியடைந்து விட்டனரோ என்ற அச்சமும் எழுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

Ramki said...

ஆம் தங்கள் கருத்து எனக்கும் ஏறபுடைவையே .கருணாநிதியால் ஒருவரை நல்லவராக்க முடியவில்லை .ஆனால் ஊழலற்ற ஆட்சி வழங்கவேண்டும் என்றும் அதற்காக ஓரளவு பாடுப்பட்ட எம்ஜியாரை ப் தன்னைப்போலவே ஏன் ஒரு படி மேலாகவே ஊழல் ஆட்சி புரிய வைத்தார்.ஒரு சில காலம் தமிழகத்தில் நல்ல காற்று வீசியது.நம் கெட்ட நேரம் அது கருணாநிதிக்கு பொறுக்கவில்லை.நமக்கு எப்போதும் கூவம் வாசனைதான் என்று தீர்மானித்தார்வாழ்க அவர் பணி

Anonymous said...

மக்கள் இன்னமும் அரசு என்றால் ஏதோ தமக்கு சம்பந்தமில்லாத அமைப்பு என்று நினைப்பதே இது தொடர்வதற்கு காரணம். வேலைக்காரர்களின் கூட்டுதான் அரசு என்பதை என்றுதான் உணர்வார்களோ!

Saravana Raja said...

இப்படி, அப்படி, செப்படி என பல திசைகளில் பயணித்து, பயணித்து, பயணித்து அலுப்பின் விளிம்பு வரை தள்ளிக் கொண்டு போய் வழக்கம் போல் காந்தியில் முடித்து வைக்கும் ஜெயமோகனின் புளித்துப் போன நடை...

ஒரே ஒரு கேள்வி. வினோபா பாவேயின் பூதான இயக்க காமெடியிலிருந்து மட்டும் அன்னாரின் தத்துவ ஞான தரிசனத்தில் கற்றுக் கொள்ள பாடங்களே இல்லையோ?

pichaikaaran said...

இந்த ஊழல் வரும் தேர்தலில் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்குமா ?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஏதேது, ஊழல்வாதிகளுக்கு நீங்களும் ஜெமோவுமே சேர்ந்து வக்காலத்து வாங்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே!

ஜெயமோகன் அருமையான எழுத்தாளர்தான். ஆனால் ஊழல் பற்றிய அவருடைய பதிவில் பழைய மன்னராட்சி ஊழல் விவகாரங்களே பெரிதும் மேம்போக்காகப் பேசப்பட்டுள்ளன. அதெல்லாம் பழங்கதை ஐயா!

இப்போது நடப்பதோ ஜனநாயகம். இப்படியெல்லாம் கேலிக்கூத்தாக நாம் பழமை பேசிக்கொண்டிருந்தால் கொஞ்ச நஞ்சமிருக்கும் ஊழல் பற்றிய பயமும் ஆட்சியாளர்களுக்குப் போய் ஒரேயடியாகக் குளிர் விட்டுவிடும்.

இப்போதே ஏதோ சுப்ரீம் கோர்ட்டில் சில நீதிமான்கள், சுப்ரமணியன் ஸ்வாமி போன்ற தனிமனிதர்களின் அப்பழுக்கற்ற ஆவேசத்தால்தான் கொஞ்சமாவது நாட்டில் சுரணை இருக்கிறது, உண்மைகள் கொஞ்சமாவது வெளிவருகின்றன.

அதையும் தோண்டிப் புதைத்து விடாதீர்கள்!

rama said...

Jeyamohan is a great writer but he is not an authority on everything.Benign neglect is not a virtue in all walks of life.

ராஜ நடராஜன் said...

உங்க மேல இருக்குற கடுப்புல நான் உங்கள் பக்கம் வருவதேயில்லை.ஆனால் சில சமயம் நல்ல தலைப்புகள் கண்ணில் பட்டு விடுவதால் வந்ததில் கண்ணில் பட்டது நிஜமாகவே சமீபத்திய மறுமொழிகள்:)

சிரிப்பை அடக்க முடியாத காரணத்தால் தலைப்பாகவே நகைச்சுவை பதிவொன்று போட்டு விட்டேன்.

Hope you would take it easy:)

dondu(#11168674346665545885) said...

@ராஜ நடராஜன்
இதில் take it easy என்று சொல்ல பிமேயமே இல்லை. உங்கள் பதிவை பார்த்து பின்னூட்டமே அங்கும் போட்டு விட்டேன்.

உங்களுக்கு ஒரு வார்த்தை. ஒன்று ப்ரொஃபைலை ஓப்பனாய் வைக்கவும், இல்லாவிட்டால் பதிவின் சுட்டியைத் தரவும். கூகளிட்டுத்தான் உங்களைக் கண்டுகொண்டேன்.

உதாரணத்துக்கு நீங்கள் இங்கு ரெஃபர் செய்த பதிவின் சுட்டி, http://parvaiyil.blogspot.com/2010/11/blog-post_26.html

துல்லியம் மிகவும் முக்கியம் அமைச்சரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜ நடராஜன் said...

//@ராஜ நடராஜன்
இதில் take it easy என்று சொல்ல பிமேயமே இல்லை. உங்கள் பதிவை பார்த்து பின்னூட்டமே அங்கும் போட்டு விட்டேன்.

உங்களுக்கு ஒரு வார்த்தை. ஒன்று ப்ரொஃபைலை ஓப்பனாய் வைக்கவும், இல்லாவிட்டால் பதிவின் சுட்டியைத் தரவும். கூகளிட்டுத்தான் உங்களைக் கண்டுகொண்டேன்.//

உங்கள் பின்னூட்டத்துக்கும் நகைச்சுவையை இயல்பாக எடுத்துக்கொண்டதற்கும் நன்றி.

நீங்கள் கொடுத்த சுட்டியில் சமீபத்து 1955ம் வருட பதிவு படித்தேன்.புத்திசாலித்தனமாத்தான் துவக்க காலத்தில் இருந்திருக்கீங்க?சமீபத்தில் இப்படி மாறீட்டீங்களோ:)

புரபைல் ஒன்றும் மூடு மந்திரமில்லை.உண்மையிலே சமீபத்து காலம் வரை அது திறந்தே கிடந்தது.எனது இன்னொரு ஆங்கில வலைப்பதிவையும் பிளாக்கையும் இணைத்த காரணத்தால் வலைப்பதிவில் போய் தமிழ் எழுத்துக்கள் உட்கார்ந்து கொள்வதால் புரபைல் மூடி விட்டேன்.

மீண்டும் நன்றி.

snkm said...

நரேந்திர மோடி, தற்போது பீகாரில் நிதிஷ்குமார்& சுஷில்குமார் மோடி. இன்னும் வலிமை சேரும். உண்மையான ராம ராஜ்யம் இல்லா விட்டாலும் மக்கள் பணம் மக்கள் நலனுக்காக செலவழிக்கப் பட வேண்டும்.

Arun Ambie said...

ஊழல் இல்லாமல் செய்திருக்க கிடைத்த வாய்ப்பை நாம் சோவியத் சோஷலிசம் என்று பேசி கோட்டை விட்டு விட்டோம். லைசென்ஸ், பர்மிட் என்று எல்லாவற்றையும் centralize செய்து மக்களிடமிருந்து அதிகாரங்களைப் பிடுங்கிவிட்டோம். Government should have acted as a mentor to local administrations. But we aped the Soviets jeopardizing our old values and have gone corrupt.

பாரதத்தின் பழம் பெருமை நகைப்புக்குரியது என்ற கேம்பிரிட்ஜ் பண்டிதரின் ஆணவப் பிடிவாதமும், அவரைச் சுற்றிச் சேர்ந்துவிட்ட ஒரு சொம்படிக்கும் சொம்பைக் கூட்டமும் செய்து வைத்த சிறுமை இது. அவர் உரக்க யோசித்த விஷயங்களைக் கூட தத்துவம் என்று சொல்லி நம்பர் போட்டு வைத்தனர் இந்த ஜால்ராக்கள்.

படேல் போன்றோர் இறந்ததும், ராஜாஜி போன்றோர் ஒதுங்கியதும், காமராஜர் போன்றோர் நம்பிக் கெட்டதும் நாட்டை நரகவழியில் செலுத்திவிட்டன.

நேரு காந்தியின் தவறான முடிவால் பதவி பெற்றார். கருணாநிதி எம்ஜியாரின் தவறான முடிவால் ஆட்சிக்கு வந்தவர். இந்திரா காமராஜரின் தவறான முடிவால் வந்தவர். போக்குவரத்துத் தொழிற்சங்கத் தேர்தல் முடிவுகளை வைத்து ஜெயலலிதா ஏதாவது தவறான முடிவு எடுக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் நாட்டில் திமுகவுக்கு மாற்று அதிமுக என்ற நிலை இன்னும் மாறவில்லை.

உருப்படியானவர்கள் முக்கியமான நேரங்களில் எடுத்த தவறான முடிவுகளே நம் இந்த அவல நிலைக்குக் காரணம். இதிலிருந்து பாடம் கற்கத் தகுதியுள்ள திறமையான துணிச்சல்காரர்களுக்கு அரசியலுக்கு வரத் துணிவில்லை.

குமரி அனந்தனார் சொன்னது போல தமிழக காங்கிரசு குங்குமம் சுமக்கும் கழுதையாக இருப்பதில் திருப்தி கண்டுவிட்டது. பாஜக மாற்று என்று சொன்னாலும் அதன் 'பழம்பெருந் தலைவர்கள்' "அகரமுதல எழுத்தெல்லாம் அழகிரி முதற்றே உலகு" என்று பேசுவது நம்பிக்கை தரவில்லை. தவிரவும் இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக a force recon with ஆக வர வாய்ப்பில்லை. மற்ற உதிரிகளில் உருப்படியாக ஏதும் தேறவில்லை.

காலம் பதில் சொல்லாமலே கடந்து போகிறது.

Arun Ambie said...

ஊழலற்ற ஆட்சியை நாம் தந்திருக்கலாம். பிரிட்டிஷாரின் centralized ஆட்சிமுறையை அப்படியே ஏற்றது தவறு. படேலை ஓரங்கட்டி நேருவை பிரதமராக்கும் காந்தியின் முடிவு தேசியக்குற்றம். சோஷலிசம் என்று உருசியாவின் பினனால் அலைந்தது இரண்டாவது மாபெரும் தவறு.

காமராஜர் இந்திராகாந்தியை பிரதமராக்கியது, எம்ஜியார் கருணாநிதியை முதல்வரக்கியது, ராஜாஜி அரசியலில் இருந்து ஒதுங்கியது, இப்படி உருப்படியானவர்கள் முக்கியமான நேரங்களில் எடுத்த தவறான முடிவுகளே நம் இந்த அவல நிலைக்குக் காரணம். இதிலிருந்து பாடம் கற்கத் தகுதியுள்ள திறமையான துணிச்சல்காரர்களுக்கு அரசியலுக்கு வரத் துணிவில்லை.

காலம் பதில் சொல்லாமலேயே கடக்கிறது.

Arun Ambie said...

தமிழகத்தில் 1998-2004ல் வளரக் கிடைத்த சந்தர்ப்பத்தை பாஜக கோட்டை விட்டது. அதன் பழம்பெரும் தலைவர் "அகரமுதல எழுத்தேல்லாம் அழகிரி முதற்றே உலகு" என்று போவது நம்பிக்கையை நெரிக்கிறது.

தமிழக காங்கிரசு ஒரு கழுதை. குமரிஅனந்தன் சொன்னது போல குங்குமம் சுமந்தது ஒரு காலம். இப்போது கிடைத்ததைச் சுமந்து போட்டதைத் தின்றுவிட்டுக் கிடக்கிறது.

திமுகவுக்கு effective மாற்றாகத் தெரிவது அதிமுக மட்டுமே. ஜெயலலிதா எடுக்கும் முடிவுகள் இப்போது முடிந்த போக்கிவரத்துக்கழக தொழிற்சங்கத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இருந்துவிடக் கூடாது. அவர் துணிந்து நின்று Rule of Law, Development ஆகியவற்றை உறுதியளித்தால் வெல்லலாம். ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.

Arun Ambie said...

Feedback system in blogger.com sucks big time. The lengthy feedback I gave was rejected as lengthy. But that was published!!!!!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது