6/16/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 101 & 102)

எபிசோடு - 101 (14.06.2010) சுட்டி - 2
அரசியல்வாதி நல்லத்தம்பியிடம் ஒரு தொழிலதிபர் தான் துவங்க விரும்பும் பொறியியல் கல்லூரியை நிறுவ அவரிடம் அரசியல் உதவிகள் எதிர்பார்க்கிறார். ஆகவே கணிசமான சூட்கேஸ் கைமாறுகிறது.

சாம்பு வேம்பு வீட்டில் மின்சார பில் குறித்து சர்ச்சை எழுகிறது. வேம்பு வீட்டை இரண்டாகப் பிரிக்கும் யோசனையை முன்வைக்கிறார்.

காரடையார் நோன்பு காதம்பரியின் அக்கா காஞ்சனா செய்து விட்டு கணவனுடன் பேசுகிறாள். அது பற்றி கணவர் கேட்க சுமங்கலிகள் தத்தம் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான பிரார்த்தனை அது என விளக்குகிறார். கூடவே வாய்க்கு ருசியான உப்பு மற்றும் வெல்ல அடை கிடைப்பதால் அவளது கணவனுக்கு அது டபுள் ஓக்கே.

சோவின் நண்பர் அவரிடம் காரடையார் நோம்பு பற்றி கேட்க, அவர் அதன் அடிப்படை சாவித்திரி சத்தியவான் கதையிலிருந்து வருவதாக கூறியவர் மற்றப்படி வேறு ஏதும் பலமான சாத்திர அடிப்படை இல்லையெனவும் கூறுகிறார்.

பொறியியல் கல்லூரி துவக்க பணம் தந்தவரை நல்லத்தம்பி ஏமாற்ற, அவரும் கருவிய வண்ணம் செல்கிறார். இங்கு அசோக் நாதனிடன் தான் போய் நல்லத்தம்பியைப் பார்ப்பதாக சொல்ல அவர் அவனை செல்ல வேண்டாம் எனக்கூறுகிறார். ஆனால் அவன் கேட்பதாக இல்லை.

(தேடுவோம்)

எபிசோடு - 102 (15.06.2010) சுட்டி - 2
அரசியலில் நல்லத்தம்பி போன்றவர்கள் ஏமாற்றுவது சகஜம் எனக்கூறிய நாதனிடம் அசோக் தன்னைப் போன்ற ஒருவர் போய் அவனைக் கேட்பது அவசியம் எனக்கூறி செல்கிறான். எதற்கும் இருக்கட்டும் என நாதன் சிங்காரத்தையும் கூட அனுப்பி வைக்கிறார். நல்லத்தம்பி அசோக்கிடம் அலட்சியமாகப் பேச அவன் பொங்கி எழுகிறான். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு செய்த அபசாரம் ஒரு வேளை தீய பலனைத் தராது போகலாம் ஆனால் ஒரு ஜனசமூகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் செய்பவன் மேலேயே திரும்பும் என அசோக் கூறுகிறான்.

அப்படியா சார் என நண்பர் கேட்க, தனக்கு ஆதரவாக இருந்த ராஜதர்மா என்னும் கொக்கைக் கொன்று, செய்நன்றி மறந்த கௌதமன் என்னும் பார்ப்பனனின் கதையை சோ கூறுகிறார். விரூபாட்சன் என்னும் அரசனால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொலையுண்ட அந்த நன்றி மறந்தவனது பிணத்தை உண்ண ஓநாய்கள், கழுகுகள் கூட மறுத்தன எனக்கூறும் சோ செய்நன்றி மறப்பதின் தீமையைக் கூறுகிறார்.

அசோக் பேசுவதை கேட்டு நல்லத்தம்பியும் கத்த ஆரம்பிக்க உள்ளே வரும் சிங்காரம் இருவரையும் சமாதானம் செய்ய முயல்கிறான். அப்போது நல்லத்தம்பி வாய் தவறி தான் வையாபுரியே என்னும் உண்மையை உளறிவிடுகிறான். கார் விபத்தில் அவன் தப்பித்த கதையையும் கூறுகிறான். அசோக் கடைசியில் அவனுக்கு கோபத்துடன் சாபமிட்டுச் செல்கிறான். அவனது ஆவேசத்தைக் கண்டு சிங்காரம், நல்லத்தம்பி, அவன் பிஏ ஆகியோரும் அசந்து போய் நிற்கின்றனர்.

நாதனிடம் நடந்ததைக் கூறும் சிங்காரம் வையாபுரிதான் நல்லத்தம்பி எனக்கூற அவரும் திடுக்கிடுகிறார். இருப்பினும் இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கூறுகிறார். சிலவாரங்களுக்கு முன்னால் நடந்த காரடையார் நோன்பு அன்றைக்கு காதம்பரி தனது புடவை தலைப்பு பற்றிக் கொண்டது பற்றிக் கூற வசுமதி கவலையில் ஆழ்கிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது