4/22/2010

யயாதி - சில எண்ணங்கள்

யயாதி
மகாபாரதத்தில் வரும் இக்கிளைக்கதை என்னை மிகவும் கவர்ந்த கதைகளில் ஒன்றாகும். நேற்றைய எங்கே பிராமணன் எபிசோட் - 71-ல் அக்கதை பற்றிய விவரம் வந்தது. அதில் அக்கதையும் விஸ்தாரமாகக் கூறப்பட்டது. ஆனால் பதிவின் கதைபோக்குக்கு ஏற்ப அதை வெகுவாக சம்பந்தப்பட்ட பதிவில் சுருக்கியுள்ளேன்.

இங்கு அது பற்றி விஸ்தாரமாக பேச ஆசை. மகாபாரதத்தில் கிளைக்கதையாக இருந்தாலும் யயாதியின் கதைக்கு பல வெர்ஷன்கள் ஏற்கனவேயே வந்துள்ளன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது வி.ச. காண்டேகரின் யயாதி. மராத்தியில் ஒரிஜினலாக எழுதப்பட்ட யயாதியை மொழிபெயர்த்தது அவரது தமிழ் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ. ஸ்ரீனிவாசாச்சாரியார் அவர்கள்.

சமீபத்தில் 1986-ல் அதை ரொம்ப சுவாரசியமாக படித்து கொண்டிருந்தேன். திடீரென பொசுக்கென நின்று விட்டது. பார்த்தால் முதல் பாகம் முற்றும் என வந்திருந்தது. அப்போது தில்லியில் இருந்தேன். ஆகவே அங்கு அதை வாங்க இயலவில்லை. அந்த ஆண்டு சென்னைக்கு விடுமுறையில் வந்தேன். நேராக கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள் வீட்டிற்கே சென்றேன். கலைமகள் காரியாலயத்தில் முகவரி கிடைத்தது. வரவேற்று பேசிக் கொண்டிருந்தவரிடம் இரண்டாம் பாகம் எங்கும் கிடைக்கவில்லை என கூறினேன். அதை தான் எழுதி முடிக்கவேயில்லை என சாவகாசமாகக் கூறினாரே பார்க்கலாம்.

என்ன செய்வது என புரியாது திகைத்தேன். தில்லிக்கும் திரும்பியாயிற்று. எங்கள் ஐ.டி.பி.எல். நூலகத்தில் சில கதைபுத்தகங்களும் வைத்திருப்பார்கள். அங்கு சென்று யயாதியின் ஹிந்தி மொழிபெயர்ப்பு கிடைக்குமா எனப் பார்த்தேன். நல்ல வேளை, அது கிடைத்தது. பிறகென்ன? தமிழில் விட்ட இடத்திலிருந்து ஹிந்தியில் தொடர்ந்து படித்தேன். ஆக ஒரு புத்தகத்தை இரு மொழிகளில் படித்தேன். வி.ச. காண்டேகரின் யயாதி மூலமொழி மராத்தி. அது எனக்குத் தெரியாது. ஆகவே வேறு வழியின்றி ஹிந்தி மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்க வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக ஹிந்தியும் தெரிந்ததால் அப்புத்தகத்தை முழுக்க படிக்க முடிந்தது. இன்னொரு விஷயம், இந்திய மொழிகளில் எந்த மொழியில் படித்தாலும் மகாபாரதத்தில் வந்த கிளைக்கதையான யயாதி விசித்திரமாகவே தோன்றியிராது.

யயாதி இப்போது தமிழிலும் முழுக்கவே வந்துள்ளதாக இப்போது அறிகிறேன். பின் ஏன் அவர் தான் பாதியிலேயே அதை விட்டு விட்டதாகக் கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை அப்புறமாக அவர் அதை செய்திருக்கலாமோ என்னவோ அறியேன். இல்லை வேறு யாரேனும் அதை செய்திருப்பார்களோ என்பது கூட எனக்குத் தெரியாது.

யயாதி நகுஷனின் மகன். சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை திருமணம் செய்தவன். தேவயானியின் கூடவே அவளுக்கு பணிப்பெண்ணாக அசுரகுல இளவரசி சர்மிஷ்டை வருகிறாள். அவள் தேவயானிக்கு பணிப்பெண்ணாக ஆனது விதியின் விளையாட்டு.

முதலில் தேவயானியும் சர்மிஷ்டையும் தோழிகள். ஒரு முறை அவர்களுக்குள் சண்டை ஏற்பட, தேவயானி தனது தந்தையும் அசுர குலகுருவுமான சுக்ராச்சாரியாரிடம் அவர் அரசனிடம் தனது மகள் தேவயானிக்கு சர்மிஷ்டையை பணிப்பென்ணாக அனுப்புமாறு கேட்கச் சொல்கிறாள். அவரும் புத்திரி மேல் உள்ள பாசத்தால் இந்த அதர்மமான காரியத்தை செய்கிறார். சுக்ராச்சாரியாரின் தயவின்றி அசுரகுலமே பலவீனமடைந்து விடும் என்னும் நிலையில் அசுர மன்னன் நாட்டு நலனுக்காக இதற்கு ஒத்து கொள்கிறான். சர்மிஷ்டையும் அதே காரணத்துக்காக இதை ஏற்கிறாள்.

இப்போது தேவயானி சர்மிஷ்டை ஆகிய இருவருமே யயாதியின் அரண்மனையில் இருக்கின்றனர். தேவயானி தான் சுக்கிராச்சாரியாரின் மகள் என்னும் கர்வத்தில் அரசனை அவமதிக்கிறாள். ஆனால் சர்மிஷ்டையோ தன் அன்பால் அவனுக்கு ஆறுதல் அளிக்கிறாள். அவளுடனும் அவன் சேர, அவளுக்கும் குழந்தைகள் பிறக்கின்றன.

இந்த விஷயம் அறிந்த தேவயானி தன் தந்தையிடம் புகார் செய்ய அவரும் அதே புத்திர பாசத்தால் விஷயத்தின் பரிமாணங்களை அறியாது யயாதிக்கு அவன் முதுமையடைய சாபம் இட்டு விடுகிறார். சாபவிமோசனமே கிடையாதா என அவன் கேட்க, அவன் மைந்தர்களில் யாரேனும் ஒருவன் தானாகவே விரும்பி தனது இளமையை அவனுக்கு அளிக்கலாம் என்றும், ஆனால் அப்போது முதுமை அவனுக்கே வரும் எனக்கூறுகிறார்.

தேவயானியின் பிள்ளைகள், மற்றும் சர்மிஷ்டையின் முதல் இரு பிள்ளைகள் இந்த விஷயத்தில் அரசனுக்கு உதவ மறுக்க, சர்மிஷ்டையின் மூன்றாவது பிள்ளை புரு மட்டும் தந்தைக்கு தனது இளமையை அளிக்கிறான்.

யயாதியும் பல ஆண்டுகாலம் அந்த இளமையை அனுபவிக்கிறான். திடீரென ஒரு நாள் ஞானோதயம் பிறக்கிறது. ஆசைக்கு எவ்வளவு தீனி போட்டாலும் அது அழியவே அழியாது. அவ்வாறு அழிக்க நினைப்பது நெருப்பை அணைக்க மேலும் மேலும் நெய்யை ஊற்றுவதற்கு சமம் என்பதை உணர்கிறான். தன் மகன் புருவிடம் வந்து அவனது இளமையை அவனுக்கு திரும்பத் தருகிறான். ராஜ்ஜியத்துக்கு அவனையே அரசனாக்குகிறான். அந்த புரு அற்புதமாக ராஜ்ய பரிபாலனம் செய்து அவன் வம்சமும் தழைக்கிறது.

யயாதியின் கதை பலரது கற்பனைகளை வெவ்வேறு விதமாகத் தூண்டுகிறது. இக்கதையில் வரும் கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே மனித பலவீனங்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். தேவயானி என்னும் பெண் சுயநலம் பிடித்த கர்வமுடைய பெண்ணாக வருகிறாள். அவர் தந்தை சுக்கிராச்சாரியாரோ தனது மகளுக்கு புத்தி சொல்வதற்கு பதில் அவள் சொற்படி ஆடுகிறார். இதில் சுக்கிராச்சாரியாரின் குற்றம் மன்னிக்க முடியாதது.

அசுர குலத்தவராக இருந்தாலும் அசுர அரசனும் அவன் மகள் சர்மிஷ்டையும் நாட்டு நலனுக்காக தியாகம் செய்கின்றனர். அவர்களை கதை உயர்வாகவே கூறுகிறது. யயாதியின் கடைசி மகன் புருவின் தியாகம் பிரமிக்க வைக்கிறது. யயாதியோ விதியின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படும் துரும்பாகவே இருக்கிறான். கடைசியில் அவன் ஞானம் பெறுவது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

யயாதியின் கதை முடிச்சு பல திரைப்படங்களில் பல விதமாக வந்து விட்டது. ஒரு படம் பெயர் மறந்து விட்டது. அதில் ராம்கி, ஊர்வசி மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். (அதன் ஹிந்தி வெர்ஷன் ஜுதாயி, அதில் அனில் கபூர் நடிக்கிறார்). அதில் முதல் மனைவியின் கேரக்டர் தேவயானியையும் இரண்டாம் மனைவியின் கேரக்டர் சர்மிஷ்டையையும் நினைவுபடுத்துகின்றன. மீதி விஷயங்கள் மசாலாவுக்காக சேர்க்கப்பட்டன. முக்கிய தீமே அன்பில்லாதாருக்கும் அன்புடையாருக்கும் இடையில் நடக்கும் வினைகள் மற்றும் எதிர்வினைகளே.

யயாதியின் கதை எல்லா காலத்துக்குமே ஏற்றது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

Anonymous said...

The take I have from Yayaathi story is that: no need to lose hope.Even yellow towel will finally get gnanam.

Anonymous said...

//Even yellow towel will finally get gnanam.//

Yellow Towel may get Gnanam;but will Tail Boy and his rogue disciples get?No way.

Anonymous said...

தமிழ்ப்படத்தின் பெயர் 'ரெட்டை ரோஜா' என்று ஞாபகம். தமிழ்ப்படத்தையும் ஹிந்திப்படத்தையும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ யயாதி கதையை அப்போது அதனுடன் இணைத்துப் பார்க்கத் தோன்றவில்லை!
கிரி

dondu(#11168674346665545885) said...

நன்றி கிரி. படத்தின் பெயர் இரட்டை ரோஜா. நீங்கள் சொன்னவுடன் கூகளில் அடித்து பார்த்து கன்ஃபர்ம் செய்து கொண்டேன்.

இம்மாதிரி சுடும் படங்களில் பல அப்பட்டமாகத் தெரியாது. தேவயானி அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ரேஞ்சில் செயல்பட்ட பெண். சர்மிஷ்டையோ முதலிலிருந்தே அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றே செயல் பட்டுள்ளாள். தன் தந்தையின் சங்கடத்தைப் போக்குவதற்காக மனம் உவந்து அடிமையாக சென்றவள், தேவயானியால் அவ்வப்போது ஸ்னப் செய்யப்பட்ட யயாதியின் மனதுக்கு மருந்தாக இருந்தவள். அவ்வளவுதான் அப்படங்களின் முடிச்சு. அதை டெவலப் செய்தவரின் திறமையில் நீங்கள் அந்த கனெக்சனை கவனிக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

snkm said...

பல மகோன்னதமான அரசர்களால் ஆளப்பட்ட நாடு இன்று சுயநலவாதிகளின் கைகளில் சிக்கி உள்ளது!

வஜ்ரா said...

இந்த யயதி கதை பற்றி நான் படித்த மற்றொரு சுவாரஸ்யமான பத்தி.
http://devdutt.com/from-oedipus-to-yayati

Anonymous said...

யயாதி எல்லாம் அப்பாலே வச்சுக்கலாம் டோன்டு.கண்ணகி சிலை மெரினாவில் இருக்கலாமா கூடாதான்னு உங்க கருத்தை பதிவு செய்யுங்க முதல்ல!
;-)

dondu(#11168674346665545885) said...

@அனானி
கண்ணகி சிலை அங்கே இருக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Srinivas said...

Mr.Dondu,
I had searched this book few years ago from one of my marti friend. But i could not get tamil version.
If possible can you give me the details of the book name, publication and where we can get.

Thanks in advance.
Srinivas

சுதாகர் said...

உங்கள் யயாதியின் எண்ணங்கள் நன்று டோண்டு அவர்களே ஆனால் என்னுடைய கருத்து யயாதி பற்றி அல்ல... அவருக்கு தன் இளைமையை கொடுத்த அவருடைய கடைசி மகன் புருவை பற்றி.....
ஒரு தந்தை தன் மனைவியை அனுபவிக்க தன் மகனின் இளைமையை கேட்பது...... மகனே தன் தாயுடன் மறைமுகமாக தவறான தெடர்புக்கு ஆளாவது போல் இருக்கிறது.....இந்த கருத்து சரியாக இருக்கும் பட்சத்தில் புரு தியாகியாவதோ அவன் தந்தை ஞானம் பெறுவதோ பலன் இல்லை என்றே தோன்றுகிறது.....
உங்கள் கருத்தை அறிய ஆவல்.... தவறாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய கருத்தையும் மாற்றி கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
சுதாகர்.

dondu(#11168674346665545885) said...

@சுதாகர்
கண்டிப்பாக இல்லை. இது என்ன எம்ஜிஆர் நடித்த நீரும் ந்நெருப்பும் சினிமாவா என்ன? அதில்தான் அண்ணன் ஜெயலைதாவுடன் உரசும்போது தம்பிக்கு ஃபீலிங்ஸ் எல்லாம் வரும். ஆனால் தம்பி அவ்வாறு ஏதேனும் செய்தால் அண்ணனுக்கு அவை வராது. (இதில் யார் அதிர்ஷ்டக்காரன் என்பது வேறு விஷயம்).

யயாதி புருவின் தாயார் சர்மிஷ்டையையோ அல்லது பெரியம்மா தேவயானியையோ புணரும் சமயம் புருவ்வுக்கு ஒரு உணர்வும் இருக்காது. எல்லாமே தொங்கிப் போயாயிற்று. நீங்கள் சொல்வது போல இருந்தால் சுக்ராச்சாரியாரே அதை விரும்ப மாட்டார்.

புருவின் இளமைதான் அவனை விட்டு அகன்றதே தவிர அந்த இளமை முறுக்கு யயாதிக்குள்ளேதான் இருக்கிறது.

இதையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களா சார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுதாகர் said...

பதிலுக்கு நன்றி டோண்டு அவர்களே....நீங்கள் சொன்ன எம்ஜிஆர் நடித்த நீரும் நெருப்பும் சினிமா... ஸாரி நான் பார்த்ததில்லை.

நீங்கள் சொன்னது போல் சன்மிஷ்ட்டை யயாதியை முதலில் அவமதித்ததாக நான் மஹாபாரத்தில் படிக்கவில்லை... நான் படித்தது என் தாத்தா எனக்கு கொடுத்த 1969தில் வெளிவந்த மஹாபாரதம் ஆதிபர்வம் என்ற புத்தகம்.... ஆசிரியர் பெயர் நினைவில்லை... ஆதிகாலத்தில் பிரம்மன் எப்படி உலகத்தை படைத்தார் என்பது முதல் கிருஷ்ணரும் அர்ஜுனனும் அக்கினி பகவானுக்காக காண்டீப வனத்தை எரித்தது வரையிலான புத்தகம்.... அதில் சூரிய வம்சத்தில் வந்த அரசர்களின் கதையில் யயாதியின் கதையும் வரும்....

சன்மிஷ்ட்டை ஒரு நாள் சாரளம் வழியாக யயாதியுடன் இவளது பிள்ளைகளும் தேவயானியின் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடிகொண்டிருப்பதை பார்க்கும் போது என்ன தேவயானியின் பிள்ளைகள் அரசரின் சாடையி்ல் இருக்கிறது என்று சந்தேகப்படுவாள்.... இப்படி தான் பிரச்சனை ஆரம்பமாகும்.... அதேபோல் யயாதியும் விதி வசத்தால் தான் தேவயானியுடன் சேர்கிறான்... சுக்கிராசிசாரியார் தேவயானியை யயாதியிடம் ஒப்படைக்கும்போது இவளுக்கு புருஷ சுகம் தவிர மத்த சுகங்கள் அனைத்தையும்தா என்று கூறியிருப்பார், ஆனால் தேவயானியோ யயாதியிடம் எனக்கு புருஷ சுகம் வேண்டும் என்பாள்... யாயாதி முடியாது என்று கூற அப்படியென்றால் எனக்கு பிள்ளை வரம் வேண்டும் என்று சத்தியம் வாங்கிவிடுவாள்.... இதுதான் யாயாதியும் தேவயானியும் சேர பின் யயாதியும் சன்மிஷ்டையும் பிரிய காரணமாயிற்று..... இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் உங்கள் நேரத்தை வீணாக்கியதற்து என்னை மன்னியுங்கள்...

தங்கள் கருத்தை மறுபடியும் மறுப்பதற்க்கு மன்னிக்கவும்.... நான் சொன்னது யயாதி புருவின் தாயார் சர்மிஷ்டையையோ அல்லது பெரியம்மா தேவயானியையோ புணரும் சமயம் புருவ்வுக்கு உணர்வு இருக்குமா இருக்காதா என்பது இல்லை..... யயாதி புருவை பார்த்து இளைமையை கேட்டதே தவறு என்றுதான் கூறுகிறேன்.... நீங்கள் Reliance Fresh அல்லது More கடைகளில் பாலா என்பவரிடம் பொருள் வாங்கினால், உங்கள் நண்பர் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டால், நான் பாலாவிடம் வாங்கினேன் என்றா சொல்லுவீர்கள், Relaince Fresh அல்லது Moreரில் வாங்கியதாக தானே சொல்லுவீர்கள்.... அதேபோல் என்னதான் யயாதி தன் மனைவிகளை சேர்ந்தாலும், சேருவதர்க்கு கருவியாக இருந்தது புருவின் இளமை அல்லவா.... அதைதான் சொன்னேன்....

பின்னுட்டம் பெரியதாக இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.....

என்றும் அன்புடன்
சுதாகர்.

dondu(#11168674346665545885) said...

என்ன சுதாகர் தூக்கக் கலக்கமா? தேவயானியை சர்மிஷ்டையையும் மாற்றிப் போட்டு குழப்புகிறீர்கள்.

நான் சொன்னது காண்டேகரின் யயாதி நாவலின் வெர்ஷன். தேவயானி முதலிலிருந்தே ஒரு spoiled child. சுக்ராச்சாரியார் செய்தது அக்கிரமம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுதாகர் said...

எப்படி இருந்தாலும் same way of usage பாதகமில்லை...!
நன்றி எழுப்பியதற்கு.....
என்றும் அன்புடன்
சுதாகர்.

Unknown said...

yayaadhi pagam-2 engu thedium kidaikkavillai. kidaikkum idaththin mugavari theriviththaal mikka payanullathaaga irukkum.
Nandri
khanesic@yahoo.co.in

Srinivas said...

Yayathi book ( both versions) available in Udumalai.com.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது