12/06/2009

திருச்சி சம்பந்தம் அத்தானை திவான் என்னு சொன்னாங்க

சமீபத்தில் டிசம்பர் 1954-ல் கல்கி அவர்கள் காலமானதும் அவர் இடத்துக்கு மீ.ப. சோமசுந்தரம் கல்கி பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வெகு குறைந்த காலமே அவர் அப்பதவியில் இருந்தார். அவருக்கு பிறகு சதாசிவம் அவர்களே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் அது பற்றி இப்பதிவு அல்ல.

சோமு இருந்த குறைந்த காலத்தில் ரவிச்சந்திரிகா என்னும் தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினார். பல நாட்டுப் பாடல்கள் அதில் ட்ச்ந்தர்ப்பத்துக்கு ஏற்ப நுழைக்கப்பட்டன. சட்டென உணர்ச்சி வசப்படும் ஒரு புல்லாங்குழல் வித்வான் ரவி. அவர் எடுத்து வளர்த்த ஒரு சுட்டிப் பெண் நாட்டியத் தாரகை சந்திரிகா. இவர்கள் இருவரை மையப் பாத்திரங்களாகக் கொண்ட அக்கதை ரவிச்சந்திரிகா என பொருத்தமாகவே பெயரிடப்பட்டது.

அதில் ஒரு நாட்டுப் பாடல் என் மனதில் இன்னும் அப்படியே இருக்கிறது. பொய்யுரைத்து தன் தகுதிக்கு மீறிய இடங்களில் சிலர் பெண்ணெடுக்கிறார்கள். அப்பொய்களை கூறுபவர்களில் முக்கியமானவர்கள் கல்யாணத் தரகர்கள். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணிவை என்னும் சொலவடையை வேதம் போல நம்பும் புரோக்கர்கள் பல. அம்மாதிரி பொய் சொல்லி வந்த பல மாப்பிள்ளைகளை பற்றித்தான் இப்பாடல்.

“திருச்சி சம்பந்தம் அத்தானை
திவான் என்னு சொன்னாங்க
திருச்சி போய் பார்த்தேன், அத்தான்
தீவட்டி பிடிக்க கண்டேனே”

“தாராபுரம் சம்பந்தம் அத்தானை
தாசிலாதாருன்னு சொன்னாங்க
தாராபுரம் போய்ப் பார்த்தென், அத்தான்
தமுக்கடிக்கக் கண்டேனே”

“கழுகுமலை சம்பந்தம் அத்தானை
கலெக்டர்னு சொன்னாங்க
கழுகுமலை போய் பார்த்தேன், அத்தான்
கழுதை மேய்க்கக் கண்டேனே”

“இலஞ்சிக்குளம் சம்பந்தம் அத்தானை
இஞ்சினியர்னு சொன்னாங்க
இலஞ்சிக்குளம் போய் பார்த்தேன், அத்தான்
இட்டிலி விற்கக் கண்டேனே”

இப்படித்தான் பல விஷயங்களில் முதலில் பார்க்கும்போது பந்தாவாகவெல்லாம் இருக்கும். கூர்ந்து கவனித்தால் ஒன்றுமே இராது. “மாய உலகில் ஆலிஸ்” என்னும் ஆங்கில புத்தகத்தில் ஒரு ராணி வருவாள். பார்ப்பவருக்கெல்லாம் எல்லாம் கழுத்தை வெட்டும் தண்டனை தருவாள். கடைசியில் ஆலிஸ் “உன்னையெல்லா யாரடி சீந்துவா, நீ ஒண்ணும் இல்லாத பிஸ்கோத்து, வெறும் சீட்டுக் கட்டு ராணி” எனக்கூறி அவளது முக்கியத்துவத்தை ஒன்றுமில்லாததாக்குவாள்.

உலகில் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களுமே மூடி மறைக்கும் வரைதான் மதிப்பு. முழு உண்மையும் தெரிந்தால் பலமுறை “பூ இவ்வளவுதானா” என்று கூறப்பட்டுவிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

மீ.ப. சோமசுந்தரம் நல்ல இலக்கிய ரசனையுடன் கல்கியிலே நிறைய எழுதியிருக்கிறாரே, அதெல்லாம் நினைவுக்கு வரவில்லையா?

Anonymous said...

ஆமா, நயன் தாராவும், நமீதாவும், அரை குறையா வந்தாத்தான் நல்லாயிருக்கு. முழுசாக் காமிச்சா, பூ, இவ்வளவுதான்

சைவகொத்துப்பரோட்டா said...

"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணிவை என்னும் சொலவடையை வேதம் போல நம்பும்"

ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கால்யாணம் பண்ணலாம் என்பதுதான் காலத்தின் கோல ஓட்டத்தில் "பொய்" ஆகி விட்டதோ.

வழிப்போக்கன் said...

நாட்டுப்பாடல்கள் தான் இன்றைய கர்நாடக சங்கீதத்துக்கு முன்னோடி. இதைப் பற்றிய விவாதம் ஒன்று புஷ்பவனம் குப்புசாமிக்கும் காலம் சென்ற கர்நாடக சங்கீத விற்பன்னர் ராஜம் அய்யருக்கும் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். காரசாரமான விவாதம். முடிவே இல்லாத மூளியான விவாதமாக முடிந்தது.
சொலவடையும் அப்படித்தான். அனுபவங்களைக் குறுக்கிச் செதுக்கியவை.
“ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம்
உள்ளே இருக்குது ஈறும் பேனும்”
என்ற சொலவடையும் தங்கள் கருத்தைத்தான் பிரதிபலிக்கிகிறது.
“ஆளைக் கண்டு மயங்காதே;ஊதுகாமாலை” என்பதும் அதுதான்.
தங்கத்தை உரைத்து மதிப்புக் காணுவது போல, மனிதர்களையும் அவர்கள் வார்த்தை ஜாலத்தை நம்பாது உரைத்துப் பார்க்கவேண்டிய காலம் இது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, “கல்விநிபுணர்கள்” என்று தம்மை வர்ணித்துக்கொள்ளும் நபர்களையும் உரைத்து மதிப்பிடவேண்டிய தருணம் இது.
சரியான சமயத்தில் வெளிவந்துள்ள சரியான பதிவு.
கிருஷ்ணமூர்த்தி

Rajan said...

//இப்படித்தான் பல விஷயங்களில் முதலில் பார்க்கும்போது பந்தாவாகவெல்லாம் இருக்கும். கூர்ந்து கவனித்தால் ஒன்றுமே இராது.//

இதுக்கு எதுக்குங்க ஆங்கிலப் புத்தகமெல்லாம் ,,,,,

இததான அன்னைக்கே அண்ணன் தேவா தேனிசைல சொன்னாரு

'' உட்டாலக்கடி செவத்த தோலுதான்...

உத்து பாத்தா உள்ளே தெரியும் நாய்ங்க வாலுதான் '' அப்பிடீன்னு

Anonymous said...

ஒரு எண்டு-ல் ஜெஸ்டஸ் அடுத்த எண்டு-ல் எங்கே பிராமணன் என்று போட்டுத் தாக்கும் எண்ணம் இருக்கா ?

உங்களிடம் ஒருவர் ஒரு லட்சம் தருகிறேன் ஆனால் ஒரு
கண்டிஷன், உதாரணத்துக்கு கூட போலி மேட்டரை தொடக் கூடாது, என்றால் என்ன செய்வீர்கள் . போலி மேடரை கட்டிப் பிடித்துக் கொண்டு பணத்தை தள்ளிவிடுவீர்களா ?

உக்கிரசிம்மன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது