3/22/2005

உள்ளம் கொள்ளை கொண்ட மகரநெடுங்குழைகாதன்

நவதிருப்பதிகளில் ஒன்று தென்திருப்பேரை. ஆழ்வார்திருநகரியிலுருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

என் இணைய நண்பர் ஒருவர் பிறந்து வளர்ந்த ஊர். அவர் எனக்குச் சில நாட்கள் முன் அனுப்பிய மின்னஞ்சலில் அதைக் குறிப்பிட்டு அவ்வூர் கோவிலில் வீற்றிருக்கும் மகரநெடுங்குழைகாதன், குழைகாதுவல்லி நாச்சியார் மற்றும் திருப்பேரை நாச்சியாரைக் கண்டு சேவிப்பதின் சிறப்பைப் பற்றிக் கூற, அங்கு செல்ல மனம் விழைந்தது. சமயம் வரும்போது போய்ப் பார்க்கலாம் என்றிருந்தேன்.

ஆனால் உள்ளம் கொள்ளை கொள்ளும் பகவானின் எண்ணம் வேறாக இருந்தது. எப்போதோ என்ன இப்போதே என்று நிச்சயம் செய்து விட்டான்.

கடந்த வியாழக் கிழமை திடீரென அங்குச் செல்ல நினைத்ததுதான் தாமதம். நூல்பிடி கணக்காக காரியங்கள் நடந்தன. பகல் 12 மணிக்குக் கிளம்பலாம் என்று முடிவு செய்யும்போது மணி 10.30. என் இணைய நண்பருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதில் அவரால் முடிந்தத் தகவல்களைக் கூறுமாறு கேட்டுக் கொண்டேன். அங்கு மொத்தம் 9 கோவில்கள். நவதிருப்பதி என அழைக்கப்படுபவை. எல்லாம் ஆழ்வார்கள் பாடல் பெற்றத் தலங்கள். எல்லாவற்றையும் ஒரே நாளில் பார்க்க வேண்டுமென்றால் நன்குத் திட்டமிடல் வேண்டும். மின்னஞ்சல் அனுப்பி 10 நிமிடத்தில் அந்த நண்பரின் தொலைபேசி அழைப்பு அமெரிக்காவிலிருந்து வந்தது. மதுரையில் இருக்கும் தன் வீட்டிற்குச் சென்று அங்குத் தங்குமாறு அழைப்பு விடுத்தார். அவர் தந்தை எனக்கு எல்லா உதவியையும் செய்வார் எனக் கூறினார்.

கார் திருச்சியைத் தாண்டும்போது நண்பரின் தந்தையுடன் செல்பேசியில் தொடர்பு கொண்டேன். அவரோ நேராக தன் வீட்டிற்கு வந்து தங்கி அடுத்த நாள் தென் திருப்பேரை செல்லலாம் என்று அன்புடன் அழைப்பு விடுத்தார். அழைப்புக்கு நன்றி கூறி ஹோட்டலிலேயே தங்கி விடுகிறேன் என்றுக் கேட்டுக் கொண்டேன். மதுரையில் ஹோட்டலில் அறை எடுத்ததும் அவருடன் மறுபடி தொடர்பு கொண்டு அவர் வீட்டு முகவரி பெற்றுச் சென்றேன். அன்பான வரவேற்பு. அவர் எனக்காக ஒரு அருமையான நிரல் செய்துக் கொடுத்து, தென் திருப்பேரையில் இருக்கும் அவர் மச்சினர்கள் வீட்டிற்குச் செல்லுமாறுக் கூறினார். அவர்களில் பெரியவர் என் நண்பரின் மாமனார்.

தென்திருப்பேரை கொள்ளை அழகுடைய ஊர். தாமிரபரணியின் மடியில் நல்ல சுகவாசம். அவ்வூர் மக்கள் மற்றும் அவரை தரிசிக்க வரும் பக்தர்களின் உள்ளம் கவர் கள்வனாம் மகரநெடுங்குழைகாதனைக் காண ஆயிரம் கோடிக் கண் வேண்டும் என்றால் மிகையாகாது. தலப் புராணத்தின்படி வேதவித்துக்களின் வேதபாராயணம் மற்றும் குழந்தைகளின் விளையாடும் ஒலிகளைக் கேட்பதற்காக பகவான் கருடனிடம் சற்றே விலகி அமரும்படிக் கூறினாராம். இதைக் கூறுகையில் நம்மாழ்வார் எழுதுகிறார்:

"வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தி தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர் காள்
வெள்ளச் சுகமன் வீற்றிருந்த வேதவொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே"

என் இணைய நண்பரின் மூதாதையர் செய்துக் கொடுத்த தங்க கருடர் அற்புதம். பிறகு ஒரு நாள் சாவகாசமாக வந்து எல்லாவற்றையும் மறுபடிப் பார்க்க ஆசை.

தென்திருப்பேரையைத் தரிசிக்கக் காலைப் பொழுது முழுதும் கழிந்தது. மற்ற 8 திருப்பதிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டிருந்ததால் மாலையில் பார்க்க முடிந்தது. பிறகு அங்கிருந்து திருச்செந்தூர் சென்றோம். என் நண்பர், அவர் தந்தை மற்றும் மாமனார் ஆகியோர் செய்த உதவி மிகப் பெரியது. என்னை நேரில் பார்க்காமலேயே என்னிடம் நட்பு கொண்டார் இந்த நண்பர். இணையத்துக்கு இத்தனை இணைக்கும் சக்தியா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

dondu(#11168674346665545885) said...

சில நாட்களாகவே நான் மன சஞ்சலத்துடன் இருந்தேன். ஒரு பின்னூட்டத்தில் என்னை அறியாமலேயே "என் உள்ளம் கவர் கள்வன் மகர நெடுங்குழைகாதன் என்னைக் காப்பான்" என்று எழுதினேன்.
எழுதி சில மணி நேரத்தில் என் அப்பன் எனக்கு அருள் பாலித்தான். இம்முறை தன் சகா ஒப்பில்லா அப்பனைப் பார்க்க எனக்கு வாய்ப்பு தந்தான். திங்கள் மதியம் புறப்பட்டு நேராக திருவஹிந்ரபுரம் சென்றோம். தேவனாதப் பெருமாள் மற்றும் ஹ்யக்ரீவரை தரிசித்தோம். அங்கிருந்து கிளம்பி இரவு கும்பகோணம் சென்று இரவு அங்கு தங்கினோம். அடுத்த நாள் திருவிண்ணகரத்தில் என் அப்பன் உப்பிலியப்பன் தரிசனம். கடவுள் தரிசனத்துக்கு நாங்கள் காத்திருக்க, பின்னால் ஏதோ சப்தம். திரும்பிப் பார்த்தல் கோவில் குட்டி யானை உப்பிலியப்பன் சன்னிதி முன் மண்டியிட்டு வணங்கும் கண்கொள்ளா காட்சி. உள்ளே கண் குளிர என் அப்பன் உப்பிலியப்பன் தரிசனம். அவன் தேஜோமயமான முகம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
பிறகு கார்ப்பங்காட்ட்டில் உள்ள வரதராஜப் பெருமாள் தரிசனம், பின் நேரே சென்னை. புது சக்தியுடன் திரும்பிய எனக்கு இங்கு இணைய நண்பர்களின் ஆதரவு மழை. மனம் அமைதியடைந்தது. என்னே மகரநெடுங்குழைகாதனின் அருள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

P B said...

iraivan arulAl nadakum kariyangal athan adaiyalangalai vittu vitte selgirathu..by the way nadapavai ellame avan seyal thAne..iraivan irupu athiseya nigazhvugal moola ariya mulvathu arveenam, andrada nigazhvugalum aria nigazhvugal en nAm ninaipathum avan arulAl nigazhvanave..pathivirku nandri. Thrisanam kidaitha thrupthi erpattathu.

dondu(#11168674346665545885) said...

நன்றி முத்துக்குமார் புராணம் அவர்களே. நீங்கள் கூறியதைத்தான் நானும் உணர்ந்துள்ளேன்.

"ஆரவார பேய்களெல்லாம் ஓய்ந்து விட்டதடா, ஆலய மணி ஓசை இங்கு கேட்டு விட்டதடா, தர்ம தேவன் கோவிலிலே மணி அடித்ததடா, தர்ம தேவன் கோவிலிலே மணி அடித்ததடா, மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா"

எழுதியது கவியரசு கண்ணதாசன். எவ்வளவு சத்தியம் நிறைந்த வார்த்தைகள்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Alex Pandian said...

டோண்டு அவர்களே,

உங்களின் இந்தப் பதிவை இன்றுதான் படிக்க முடிந்தது. மிக அருமை.
இது போல இன்னும் பல கோயில்கள் சென்று வந்த அனுபவத்தை பதியுங்களேன்.
சென்னையில் உள்ள கோயில்களானாலும் சரி, மற்ற ஊராக இருந்தாலும் சரி. கோயிலின் அமைப்பு, சிறப்பு, கீர்த்தி எல்லாவற்றுடன் அங்கு உங்களுக்குப் பிடித்த/பிடிக்காத விஷயங்களையும் எழுதினால் நிச்சயம் ஒரு தொடர் எங்களுக்குப் படிக்கக் கிடைக்கும்

- அலெக்ஸ்

dondu(#11168674346665545885) said...

கண்டிப்பாக செய்ய வேண்டிய காரியம்தான் அலெக்ஸ் அவர்களே. என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருள் இருந்தால் அதையும் செய்வேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கூற மறந்து விட்டேன் அலெக்ஸ் அவர்களே. திருவிண்ணகர ஒப்பில்லா அப்பனை பற்றி நான் போட்ட ஒரு பதிவின் சுட்டி இதோ.

கூடவே நான் எப்போதும் தெய்வமாக வணங்கும் ஒரு ஆதரிச தம்பதியரை பற்றிய பதிவின் சுட்டியும் இதோ. அவர்களுக்குப் பிறகுதான் எனக்கு எல்லா கோவில்களும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Alex Pandian said...

டோண்டு அவர்களே,

நன்றி, ஒப்பிலியப்பன் மற்றும் தங்கள் பெற்றோர் பற்றிய பதிவு சுட்டிகளுக்கு.
படிக்க மிகவும் நிறைவாக இருந்தது.

- அலெக்ஸ்

dondu(#11168674346665545885) said...

நன்றி அலெக்ஸ் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது